அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பிகார் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, 20 மாவட்டங்களில் இணைச் சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 17 முதல் 12 மாவட்டங்களில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மேலும் எட்டு மாவட்டங்களை சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், பிகாரில் வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்று உள்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கைமூர், போஜ்பூர், ஔரங்காபாத், ரோஹ்தாஸ், பக்சர், நவாடா, மேற்கு சம்பரன், சமஸ்திபூர், லக்கிசராய், பெகுசராய், வைஷாலி, சரண், முசாபர்பூர், மோதிஹாரி, தர்பங்கா, கயா, மதுபானி, ஜஹானாபாத், ககாரியா மற்றும் ஷேக்புரா ஆகிய இடங்களில் இணையச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன. இருப்பினும், இந்த மாவட்டங்களின் வாடிக்கையாளர்கள் தொலைபேசி வசதியை பெறுகின்றனர்.
இதற்கிடையில், பிகார் அரசு 11 மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்களின் பாதுகாப்புகளைப் பலப்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மாநில பாஜக தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு அளித்துள்ளது.