தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் சுமார் 9 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் சந்தித்துக் கொண்டனர்.
தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் இடையே பல மாதங்களாகவே பனிப் போர் நீடித்து வந்தது. இருவரும் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டே இருந்தனர்.
இதையும் படிக்க | ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 4 பேர் பலி
இதன் காரணமாக, ஆளுநர் மாளிகைக்குச் செல்வதை சந்திரசேகர் ராவ் தவிர்த்து வந்தார். ஆளுநர் தமிழிசை பங்கேற்கும் நிகழ்ச்சிகளையும் சந்திரசேகர் ராவ் புறக்கணித்து வந்தார். குடியரசு தின விழாவும் இதில் அடங்கும்.
இந்த நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துக் கொண்டனர்.