கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை வெளியாகின. இவற்றில் பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக முன்னணியில் உள்ளது.
இதையும் படிக்க | பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் இணையும் மம்தா பானர்ஜி
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, “உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையாக உழைத்த போதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “உத்தரப்பிரதேச மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்களின் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன். இந்தத் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், எங்களுக்காக உழைத்த கட்சியினருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.