பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியின் பகவந்த் மான் மார்ச் 16-ம் தேதி பதவியேற்கிறார்.
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான். ஆளுநரும் ஒப்புக்கொண்டதாக பகவந்த் மான் தெரிவித்தார்.
பதவியேற்பு விழா பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
முன்னதாக, ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாலைப் பேரணி நடத்துகின்றனர். இதனிடையே, பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் உள்ளிட்ட இடங்களுக்கு இருவரும் சென்றனர்.