கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் நாளை (திங்கள்கிழமை) இரண்டாவது முறையாகப் பதவியேற்கிறார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழா காலை 11 மணியளவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க | ஏற்றுமதியில் சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
பதவியேற்பு விழாவில் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள் என்பது குறித்த தகவலை பாஜக இன்னும் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் பிரமோத் சாவந்தைத் தொடர்புகொண்டது. அப்போது, "எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றி உங்களுக்கு நாளை தெரியவரும்" என்றார் அவர்.
முதல்வரைத் தவிர்த்து கோவா அமைச்சரவையில் 11 அமைச்சர்கள் இடம்பெறலாம்.