தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் கடுமையாகப் போராடி இரவு 10.30 மணிக்குத் தீயை அணைத்தனர்.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சம்பவ இடத்துக்கு இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், "உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், உடல்களை அடையாளம் காணப்படுவது கடினமாக உள்ளது" என்றார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27-இல் இருந்து சற்று முன்பு 30 ஆக உயர்ந்துள்ளது.