நாட்டில் ஏற்படும் கலவரங்களால் பயனடைவது காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், கலவரத்தால் பயனடைவது காங்கிரஸா? மக்களுக்குத் தெரியும் கலவரங்கள் மூலம் பயனடைவது எந்தக் கட்சி என்று. கலவரம் ஏற்பட்டால் காங்கிரஸ் எப்போதும் பின்னடைவையே சந்திக்கும்.
பாஜக தற்போது ஹிந்து மக்களின் வாக்குகளைப் பெறலாம். ஆனால் எதுவரை அது தொடரும். நாட்டில் தற்போது பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடு இயங்குவதற்கு ஜனநாயகமும் அரசியலமைப்பும் உதவுகிறது. ஆனால் படிப்படியாக ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த சில நாளிகளில் மட்டும் ஒரே மாதிரியான பின்னணியில் 7 மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
அமித் ஷாவிற்கு தைரியம் இருந்தால், உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கட்டும். அப்படி செய்தால் கலவரத்திற்கு பின்புலமாக இருந்தவர்கள் வெளிப்படுவார்கள் என்று சவால் விட்டார்.