ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் தலைவர் ஷர்ஜீல் இமாமின் இடைக்கால ஜாமீன் மனுவை மே 26-ம் தேதி விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
2019 மற்றும் 2020-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் ஜனவரி, 2020-இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டது. அவர் ஏறத்தாழ 28 மாதங்களாக சிறையில் உள்ளார்.
இதனிடையே, தேசத் துரோக வழக்கு பதிவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜாமீன் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி ஷர்ஜீல் இமாம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட விசாரணை அமர்வு நீதிபதிகளான சித்தார்த் மிருதுல் மற்றும் ராஜ்னீஷ் பத்நாகர் வரவில்லை.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை மே 26-ம் தேதிக்குப் பட்டியலிட்டுள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.