ஆளும் இடதுசாரிக்கு எதிராக காங்கிரஸ் கேரளம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதாகவும், அரசின் நிர்வாகம் செயலிழந்துவிட்டதாகவும் காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கேரளம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கியும் இந்தப் பேரணி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்
அரசிற்கு எதிரான போராட்டம் குறித்து கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியதாவது: மக்கள் விலைவாசி உயர்வின் விளைவுகளை சந்தித்து வருகின்றனர். அதிகாரிகள் மக்களை கண்டுகொள்ளவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாநிலத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றார்