தில்லியில் நிலவி வரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘கடுமையான’ காற்று மாசு காரணமாக தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, கடந்த சில நாள்களாக தேசியத் தலைநகரின் காற்றின் தரம் ‘கடுமையாக’ மோசமடைந்துள்ளது. ‘கடுமை’ பிரிவில் காற்று மாசுபாடு இருப்பது ஆரோக்கியமான மக்களைப் பாதிக்கிறது. மேலும், குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவா்களை தீவிரமாக பாதிக்கிறது என்று சிபிசிபி தெரிவித்திருந்தது.
இதையடுத்து தேசியத் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளை மூடுவது குறித்து தில்லி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆா்.) தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், தில்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உள்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.