ஜார்க்கண்டில் பாஜக படம் பொறித்த வாகனத்துடன் வருமான வரித்துறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமான இடத்திற்கு சோதனையிட வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அழைப்பாணை வழங்கியுள்ளது. இதற்கு ஹேமந்த் சோரன் 3 வார கால அவகாசம் வழங்கக் கோரியிருந்தார்.
இதையும் படிக்க | நம்பிக்கை தருமா எகிப்து காலநிலை மாற்ற மாநாடு?
இதேபோன்று வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் தொடர்பான வழக்கில் அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெய்மங்கல் சிங், பிரதீப் யாதவ் ஆகிய இருவருக்கு சொந்தமான இடங்களில் வருவான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
மத்திய அரசு, விசாரணை அமைப்புகளை தங்களது அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில் நடைபெற்ற இந்த சோதனை அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலை சமமாக மதிக்க வேண்டும்: மத்திய அரசு
இந்நிலையில் பெர்மோ பகுதியில் சோதனை மேற்கொள்ள வந்த வருமான வரித்துறையினரின் வாகனத்தில் பாஜகவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையினரின் வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் இருந்த பாஜகவின் படம் காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த படத்தை பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அகற்றினார். மேலும் அந்த வாகனம் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க | கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி: 205 யானைகள் பலியானதாக தகவல்
“பாஜகவினரின் வாகனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு நேர்மையைப் பற்றி பாடமெடுக்கின்றனர். அவமானத்தால் அவர்கள் இறக்க வேண்டும். விசாரணை அமைப்புகளின் பெயருடன் மத்திய அரசு மக்கள் அமைத்த அரசை அச்சுறுத்த முயன்று வருகிறது” என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய பாஜக சட்டப்பேரவை தலைவர் பாபுலால் மரந்தி இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையினரே பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.