மிசோரத்தில் கல்குவாரி சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலம் ஹ்னதியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென குவாரி சரிந்து விழுந்த நேரத்தில் 12 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இதில் 11 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் காணாமல் போன ஒருவரின் உடல் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
மிசோரமில் கல்குவாரி இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதன்படி, கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றார்.
சம்பவ இடத்தில் மாநில காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.