போலியான மற்றும் தங்களுக்கு சாதகமாக திருத்தம் செய்த விடியோவினை பகிர்ந்து கீழ்த்தனமான அரசியல் செய்யும் பாஜக ஒரு நாள் அதற்கான பலனை கண்டிப்பாக அனுபவிக்கும் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைப்பயணம் தற்போது மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நடைப்பயணத்தின்போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்கள் எழுப்பப்படுவது போன்ற விடியோ ஒன்றினை பாஜக பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விடியோவினை பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: சம்பளத்தை உயர்த்திய சிம்பு!
இந்த போலியான விடியோ குறித்து காங்கிரஸ் கூறியதாவது: காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மக்களிடத்தில் கிடைத்துள்ள வரவேற்பைக் கண்டு பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது. அதன் காரத்திணாலேயே தங்களது கீழ்த்தனமான அரசியலை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் பதிவிட்டுள்ள போலியான விடியோவை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில், அவர்களை சட்டரீதியாக சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா பகிர்ந்துள்ள அந்த விடியோவில் இருப்பதாவது: ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்ற வேளையில் அந்த விடியோவின் முடிவில் 21ஆவது நொடியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற குரல் கேட்கிறது.
இதையும் படிக்க: மம்தா-சுவேந்து அதிகாரி திடீர் சந்திப்பு: காரணம் இதுதானா?
இது குறித்து காங்கிரஸின் தொலைதொடர்புத் துறை பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பாரதத்தை இணைப்போம் நடைப்பயணத்தை பாஜக தனது கீழ்த்தனமான அரசியலால் இழிவுபடுத்தி வருகிறது. பாஜகவின் இந்த செயலுக்கு நாங்கள் உடனடியாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.