அசாமில் கடந்த 7 நாள்களில் 11 காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் இன்று மேலும் ஒரு யானை பலியாகியுள்ளது. திப்ருகர் மாவட்டத்தில் உள்ள தேஹிங் பட்காய் என்ற இடத்தில் இன்று காலை பலியான நிலையில் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக ஜோர்ஹத் மாவட்டத்தில் காரிகாட்டியா ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு யானைகள் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் போது, அதிலிருந்த 22 வயது பெண் யானையும், அதன் 10 மாதக் குட்டியும் ரயிலில் அடிபட்டு பலியாகின.
இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு துணை வயது யானை, இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தது. இப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 7 நாள்களில் மட்டும் ரயில் மோதியும், வயல்வெளிகளில் உள்ள மின்சாரம் தாக்கியும், உணவில் விஷம் போன்ற சம்பவங்களால் 11 காட்டு யானைகள் பலியாகியுள்ளன. இந்நிகழ்வுகள் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க மாநில அரசு உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.