தில்லி அரசை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் நாளை கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.
மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் கடந்த சில நாள்களுக்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையும் படிக்க | ‘ரூ. 500-க்கு சிலிண்டர்’: ராகுல் காந்தியின் 8 வாக்குறுதிகள்
இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜகவினர், மதுபானக் கடைகளுக்கான உரிம முறைகேடு வழக்கிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆம் ஆத்மி முயற்சி செய்வதாகவும், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், இன்று தில்லி பாஜக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அனைத்து பாஜக எம்.எல்.ஏ.க்களும் நாளை நேரில் சந்தித்து, ஆம் ஆத்மி அரசை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.