‘ரூ. 500-க்கு சிலிண்டர்’: ராகுல் காந்தியின் 8 வாக்குறுதிகள்
குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பிரதான கட்சிகள் நேரடியாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், ஆமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி அளித்த 8 வாக்குறுதிகள்:
1. மாநில மக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இலவச மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.
2. ரூ. 3 லட்சம் வரை உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
3. ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் மானியமாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்.
4. ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சமையல் எரிவாயு, ரூ. 500-க்கு விற்கப்படும்.
5. பெண்களின் இலவசக் கல்விக்காக 3,000 ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படும்.
6. கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
7. விவசாயிகளின் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
8. அரசுப் பணிகளில் ஒப்பந்த முறை நிறுத்தப்படும் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை வழங்கப்படும்.