இந்தியாவில் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த சீக்கியர் அமர்ஜித் சிங், பாகிஸ்தானில் வசித்து வரும் தனது முஸ்லிம் சகோதரியை 75 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அமர்ஜித் சிங்கும் அவரது சகோதரியும் இந்தியாவிலேயே இருக்க, அவர்களது முஸ்லிம் பெற்றோர் பாகிஸ்தான் சென்றுவிட்டனர்.
தற்போது தனது குடும்பம் பாகிஸ்தானில் இருப்பதை அறிந்து, சிறப்பு விசா பெற்று வாகா எல்லை வழியாக பயணித்து சிங் தனது சகோதரியை சந்தித்துள்ளார்.
சக்கர நாற்காலியில் சென்ற அமர்ஜித்தை, கண்ணீர் மல்க வரவேற்ற சகோதரி குல்சூம் (65), தனது அண்ணனை கட்டியணைத்துக் கொண்டார். இருவரின் கண்களிலும் கண்ணீர் நிற்கவேயில்லை.
சகோதரை சந்திக்க ஃபைசலாபாத்திலிருந்து தனது மகனுடன் குருத்வாரா வந்திருந்தார் குல்சூம். இது குறித்து அவர் கூறுகையில், 1947ஆம் ஆண்டு எனது பெற்றோர் அவர்களது சகோதரன் சகோதரியை இந்தியாவிலேயே விட்டுவிட்டு பாகிஸ்தான் வந்துவிட்டனர்.
பாகிஸ்தான் வந்த பிறகுதான் நான் பிறந்தேன். எனது தாய் அடிக்கடி தனது பிள்ளைகளை இந்தியாவில் தொலைத்துவிட்டது குறித்து எப்போதும் கூறி அழுதுகொண்டே இருப்பார். ஆனால் எனது வாழ்நாளில் அவர்களை மீண்டும் சந்திப்பேன் என்று நினைக்கவேயில்லை.
இதையும் படிக்க | ராணி எலிசபெத்துக்காக காத்திருந்த மன்னரின் உடல்
சில ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் நெருங்கிய நண்பர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வந்து தன்னை சந்தித்ததாகவும் அப்போது, தனது தாய், தனது பிள்ளைகள் குறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியும் என்று அவர்கள் இருப்பிடம் குறித்து கூறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சந்திப்புக்கான ஏற்பாடு செய்தபோதுதான், இந்தியாவில் விட்டுவந்த மகன் உயிரோடு இருப்பதும், மகள் இறந்துவிட்டதும் தெரிய வந்துள்ளது.
மகனை தத்தெடுத்து வளர்த்து வந்த சீக்கிய குடும்பம், அவனுக்கு அமர்ஜித் சிங் என பெயரிட்ட வளர்த்ததும் தெரிய வந்தது. பாகிஸ்தானுக்கு வந்த அமர்ஜித், தனது உண்மையான பெற்றோர் முஸ்லிம் என்று தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தாராம். ஒரு வழியாக தனது பிரிந்த குடும்பத்தைச் சந்தித்த ஆனந்தத்திலிருந்து அவரால் வெளியே வர முடியவில்லை.