தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்துப் பேசி வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தில்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சோனியாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மறுக்கும்பட்சத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல, காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது.