காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது காங்கிரஸ் தலைவர் பதவியிலும் பின்பற்றப்படும் என நம்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போட்டியிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
இந்நிலையில், கேரளத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களுக்கு எனது அறிவுரை.
நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவியை அடைய உள்ளீர்கள்.
இது ஒரு நிறுவனப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் ஒரு நம்பிக்கை அமைப்பு மற்றும் நாட்டின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது' என்றார்.
காங்கிரஸில் ஒருவருக்கு ஒரு பதவி என்று எடுக்கப்பட்ட முடிவு காங்கிரஸ் தலைவர் பதவியிலும் பின்பற்றப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி, அசோக் கெலாட்டுக்கு மறைமுகமாக இந்த பதில் அளித்துள்ளார்.