பாஜக, ஆர்எஸ்எஸ் பரப்பும் வன்முறை மற்றும் வெறுப்புக்கு எதிரானதே என்னுடைய இந்த நடைப் பயணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கேரளத்தில் உள்ளார்.
இன்று பிற்பகல் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதே நடைப் பயணத்தின் நோக்கம். தனியாக பயணத்தைத் தொடங்கிய என்னுடன் இன்று லட்சக்கணக்கானவர்கள் நடக்கிறார்கள்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது மிகவும் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த நடைப் பயணம் தேவைப்படுகிறது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸால் பரப்பப்படும் வெறுப்பும் வன்முறையும் இந்தியாவின் சிந்தனையல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைப்பதே எனது நோக்கம். இந்தியா அமைதி மற்றும் அகிம்சை வழியில் செல்கிறது' என்றார்.
நடைப்பயணத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்கள் இடம்பெறவில்லை என்பதற்கு, 'வெளிப்படையாக சொல்கிறேன், எங்களால் 10,000 கி.மீ. நடக்க முடியாது. உத்தரப் பிரதேசத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு பார்வை உள்ளது. அது மிகத் தெளிவான பார்வை. இந்தியாவின் ஒரு முனையிலிருந்து இந்தியாவின் மற்றொரு முனைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம்' என்று பதில் அளித்தார்.
மேலும் இன்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் நடைபெறும் என்ஐஏ சோதனைகள் குறித்த கேள்விக்கு, 'மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்த்து போரிட வேண்டும். அவற்றை அனுமதிக்கவே முடியாது' என்றார்.
'ராகுல் காந்தி கடந்த 15 நாள்களில் இரண்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திவிட்டார், சில தலைவர்கள் கடந்த 20 ஆண்டுகாளாகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை' என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, 'சில தலைவர்கள் இல்லை, ஒரே ஒரு தலைவர்தான் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை' என்று கூற அரங்கில் சிரிப்பலை எழுந்தது.