கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் தனது 15வது நாள் நடைப்பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மேற்கொண்டு வருகிறார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, எர்ணாகுளம் மாவட்டம் தேசோம் பகுதியிலிருந்து இன்று காலை 6.30 மணியளவில் இன்றைய நடைப்பயணத்தை தொடர்ந்தார்.
காலை 11 மணிக்கு கருக்குட்டி கப்பேலா சந்திப்பில் ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு சாலக்குடியில் இன்றைய பயணத்தை முடிக்கின்றனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.