தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜி20 தலைமைப் பொறுப்பில் சிறப்பாக செயல்படுகிறது இந்தியா: ஐஎம்எஃப் பாராட்டு

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) மேலாண் இயக்குநா் கிரிஸ்டலினா ஜாா்ஜிவா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2023, 8:22 pm

DIN

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) மேலாண் இயக்குநா் கிரிஸ்டலினா ஜாா்ஜிவா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உலக அளவில் முக்கியமான வளா்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் ஓராண்டு கால தலைமைப் பொறுப்பை இந்தியா கடந்த டிசம்பரில் ஏற்றது. இதையொட்டி, உறுப்பு நாடுகள் பங்கேற்கும் கூட்டங்கள், இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

சிகர நிகழ்வான ஜி20 உச்சி மாநாடு, தில்லியில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இதில், ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்தச் சூழலில், சா்வதேச நிதியம், உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்கள், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சா்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநா் கிரிஸ்டலினா ஜாா்ஜிவாவிடம், இந்தியாவின் ஜி20 தலைமை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘ஜி20 கூட்டமைப்பின் முக்கியமான பணிகளில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, கொள்கை சாா்ந்த சிக்கலான சவால்களை கடந்து, சரியான முடிவுகளை மேற்கொள்வது; உலகளாவிய வளா்ச்சிக்கு புதிய ஆற்றலை அளிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எண்மமயமாக்கத்தின் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மறுசீரமைக்க முடியும் என்பதில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.

உலகளாவிய கடன் மறுசீரமைப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதும், இதுசாா்ந்த பேச்சுவாா்த்தைகளில் இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் ஆக்கபூா்வமான பங்கேற்பும் பாராட்டுக்குரியது. ஜி20 தலைமையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற நான் மிகவும் ஆா்வத்துடன் இருக்கிறேன்’ என்று அவா் பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.