குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது என்று கூற முடியாது, அவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தில்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பின் 'இந்தியா' கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 'மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். இதையடுத்து மணிப்பூர் மக்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்த அறிக்கையை வழங்க குடியரசுத் தலைவரை இன்று இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் சேர்ந்து சந்தித்தோம்.
மணிப்பூரில் நடந்த விவரங்கள் குறித்தும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தார். அதன்பின் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மேலும் விளக்கினார். பின்னர் குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தோம்.
அனைத்தையும் கேட்ட குடியரசுத் தலைவர், 'பரிசீலிக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அளவிலே அவரது பதில் இருந்தது.
மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகச் செல்ல வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும், இரு தரப்பிலும் சுமூகமாகப் பேசி பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை மனுவில் பிரதானமான கருத்தாகும்' என்றார்.
பின்னர் குடியரசுத்தலைவருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தொல். திருமாவளவன்,
'பரிசீலிக்கிறோம் என்று ஒற்றை வார்த்தையில் தெரிவித்தார், சந்திப்பு மனநிறைவாக இருந்தது என்று சொல்ல முடியாது, ஏனெனில் அவர் எந்த பதிலையும் எங்களுக்கு விளக்கமாகச் சொல்லவில்லை. அவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை. பரிசீலிக்கிறோம் என்ற அளவிலேயே அவரது பதில் இருந்தது. ஆனால், கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியதையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் அமைதியாக தலையசைத்துச் சென்றார்' என்று கூறினார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு