மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியின் கை விரலை கடித்து தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெங்களூருவில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடந்துள்ளது. காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க: 9ம் வகுப்பில் சேர்ந்த 78 வயது முதியவர்! வாழ்நாள் இலக்குக்காக...
புஷ்பா மற்றும் விஜயகுமாருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் ஆனது முதலே விஜயகுமார் புஷ்பாவை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவனின் சித்ரவதையை தாங்கிக் கொள்ள முடியாத புஷ்பா, கணவர் வீட்டிலிருந்து அவரது மகனுடன் வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி புஷ்பாவின் வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகுமார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்க புஷ்பாவின் இடது கை விரலை அவர் கடித்து தின்றதாக கூறப்படுகிறது. விரலை கடித்து தின்றது மட்டுமின்றி, விரலை சாப்பிட்டது போலவே உன்னையும் கொன்று சாப்பிட்டு விடுவேன் என புஷ்பாவை மிரட்டியுள்ளார். இதையடுத்து, விஜயகுமார் மீது புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.