உச்சநீதிமன்ற உத்தரவு சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடி: கே.எஸ். அழகிரி

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'மக்களவையில் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றும்போது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பேசிய 20 நாட்களில் சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்றைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் மக்களவை உறுப்பினராக மீண்டும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை அரசமைப்புச் சட்டத்திலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைவரும் பெருத்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். உச்சநீதிமன்றம் நீதி வழங்கியதன் மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மோடி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு பாசிச, சர்வாதிகார ஆட்சிக்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலாக மக்களவையில் தலைவர் ராகுல்காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப்போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com