மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம், குழந்தைகளுக்கு இலவச கல்வி , வேலைவாய்ப்பின்மை உதவித் தொகையாக மாதம் ரூ.3000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். வேலையின்றி இருக்கும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். வேலை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும். ஊழல் மற்றும் சிபாரிசுகள் ஒழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஹிமாசலுக்கு ரூ.200 கோடி நிவாரணம்: மத்திய அரசு ஒப்புதல்!
தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதியாக, மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளின் தரமும் உயர்த்தப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது போன்றவை தடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப் புறங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கப்படும். பழைய மின்கட்டணங்களின் நிலுவைத் தொகைகள் ரத்து செய்யப்படும். அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும். உடல் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு மேற்கொள்ளப்படும். ராணுவ வீரர் அல்லது காவல் துறையில் பணிபுரியும் ஒருவர் பணியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் ஆம் ஆத்மி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.