மும்பையில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தியுள்ளன. முதல் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அடுத்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பங்கேற்பதை அக்கட்சி உறுதி செய்துள்ளது.