மிக்ஜம் புயல் எப்போது கரையை கடக்கும்? எங்கே கனமழை பெய்யும்?

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை புயலாக உருவாகி டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் எப்போது கரையை கடக்கும்? எங்கே கனமழை பெய்யும்?


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை மறுநாள் புயலாக உருவாகி டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மிக்ஜம் புயல் டிச.5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்றும், தற்பொழுது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயலானது மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் புயலாக வலுப்பெற்று 5ஆம் தேதி கரையைக் கடக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் விரிவான பதிவில்,  வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜம்’ புயல் டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூா் -மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கடலூா், மயிலாடுதுறை, நாகை , திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிறன்ற (டிச. 3) கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி திங்களன்று, வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைக் காற்று எச்சரிக்கை: புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஞாயிறன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.  திங்கள்கிழமை மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com