ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்குக்கு எதிராக சனிக்கிழமை அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சஞ்சய் சிங்கின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தென்கொரியா
தொழிலதிபர் தினேஷ் அரோரா ரூ.2 கோடியை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. சஞ்சய் சிங் இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிறகு, மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முக்கிய தலைவர் சஞ்சய் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.