நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று (டிச.3) மாலை 6 மணி நிலவரப்படி பல்வேறு தொகுதிகளின் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.
இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி, 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் பாஜக 15 இடங்களில் வெற்றியடைந்து, மேலும் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்று, 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 77 தொகுதிகளில் வெற்றியும், 87 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றியும், 47 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: 4 மாநில தேர்தல் முடிவுகள்: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தானில் பாஜக 99 இடங்களில் வெற்றியடைந்து, 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 56 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றிபெற்று, 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்று, 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.