அதிர்ஷ்டம் தரக்கூடிய ‘மந்திரப் பெட்டி’ ஒன்றை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3.5 கோடி மோசடி செய்த பாதிரியார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் காண்டிபிதா பகுதியில் உள்ள நியூலைப் சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார் திமோதி ஜோஷி. அவர் நாகாலாந்து மாநிலத்தின் திமாபூரைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 3.5 கோடி மோசடி செய்துள்ளார்.
திமோதி ஜோஷி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ஷ்டம் தரக்கூடிய மந்திரப் பெட்டி ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறி நாகாலாந்து பெண்ணை நம்பவைத்துள்ளனர். அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாதிரியார் வழங்கிய பல்வேறு வங்கிக் கணக்குகளில் 3.5 கோடி ரூபாய் பணத்தினை அப்பெண் டெபாசிட் செய்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண்ணை ஏமாற்றுவதற்காக ஒரு பெட்டியை தயாரித்து அவரிடம் வழங்கியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஜோஷியை திமாபூர் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிக்க | 3 மாநில மக்களும் மோடியின் தலைமையை ஆதரித்துள்ளனர்: பிரகலாத் ஜோஷி
இதுகுறித்து பேசிய போலீசார், “மந்திரப் பெட்டி என அப்பெண்ணிடம் வழங்கப்பட்டது வெற்றுப் பெட்டியே. அவரை ஏமாற்றுவதற்காகவே அதனைத் தயாரித்து அவரிடம் விற்றுள்ளனர்” என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறினர்.
மேலும், பாதிரியாரான ரெவரெண்ட் திமோதி ஜோஷி, அங்கு வரக்கூடிய பக்தர்களை பல்வேறு வகையான மோசடிகளில் சிக்க வைத்துள்ளார் என்றும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலரிடம் ஜோஷி மற்றும் அவரது சகோதரர் மோசடி செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறினர்.
இதையும் படிக்க | யோகா குரு மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்