உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தலைவருக்கு ராகவ் சத்தா நன்றி

மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா ந
இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா.
இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா.

புது தில்லி: மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா நன்றி தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கடந்த ஆகஸ்ட் மாதம் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரப்பட்டு அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது.

காந்தி சிலைக்கு மரியாதை:

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை (டிச. 4) தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவா் பங்கேற்றாா். தனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி அவா் மரியாதை செலுத்தினாா். முன்னதாக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா நன்றி தெரிவித்து வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

எனது இடைநீக்கத்தை ரத்து செய்வதற்காக நான் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்னரே, எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. ஏறத்தாழ 115 நாள்களாக மாநிலங்களவையிலிருந்து நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன்.

இந்தக் காலகட்டத்தில் மாநிலங்களவைக்குள் என்னால் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியவில்லை. உங்களது (பொதுமக்கள்) கோரிக்கையை இந்தக் காலகட்டத்தில் என்னால் அவையில் பதிவு செய்ய முடியவில்லை.

இந்தச் சூழலில், எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 115 நாளில் ஏராளமானோரிடமிருந்து அன்பையும், வாழ்த்தையும் நான் பெற்றேன். இது எனக்கு கூடுதல் வலிமை தருகிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com