மிக்ஜம் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இன்று (டிசம்பர் 6) பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, “1.2 கோடிக்கும் அதிகமான தமிழக மக்கள் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் புயலால் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. படகுகளில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணைப் பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு இந்நேரத்திற்கு மிக்ஜம் புயலை தேசிய பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் செய்யவில்லை.
எனவே மத்திய அரசு அவர்களது குழுவை விரைந்து அனுப்பி, தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை மிக்ஜம் புயல் தமிழகப் பகுதிகளில் கரையைக் கடந்தது. தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு மிக்ஜம் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.