இந்தியா கூட்டணி விரைந்து செயல்பட்டு, அதன் எதிர்கால திட்டங்களை இறுதி செய்யவேண்டும் என்று பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்து புதன்கிழமை பேசிய அவர், “மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் இருந்தன. இப்போது பாஜக வெற்றிபெற்றுள்ளது.
இதையும் படிக்க | 'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்
அதேபோல தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இப்போது அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தல் அரசியலில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும். இதில் இதற்கு மேல் விவாதிக்க ஒன்றும் இல்லை.” என்று கூறினார்.
மேலும் இந்தியா கூட்டணி குறித்துப் பேசிய நிதிஷ் குமார், “டிசம்பர் மூன்றாவது வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் இந்தியா கூட்டணி விரைந்து செயல்பட்டு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட கூட்டணியின் எதிர்கால திட்டங்களை இறுதி செய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) இந்தியா கூட்டணியின் கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் முக்கிய தலைவர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியதால் கூட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.