நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தக் காணொளியில் பேசிய சீக் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) பிரிவினைவாதிகள் கூட்டமைப்பின் தலைவர் குருபத்வான்ட் சிங் பன்னு, இந்தத் தாக்குதல் மூலம் நாடாளுமன்றத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
2001ல் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் நினைவாக டிசம்பர் 13 ஆம் நாள் மீண்டும் தாக்குதல் நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: கார்கே, சோனியா, ராகுலுடன் ரேவந்த் ரெட்டி சந்திப்பு!
2001 தாக்குதலின் குற்றவாளியான அப்சல் குருவின் புகைப்படத்தோடு வெளியான அந்த காணொளியில் பேசிய பன்னு, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அவரைக் கொல்ல முயன்றதாகவும் அதற்கு பதிலடியாக வரும் டிசம்பர் 13-ல் இந்தத் தாக்குதலை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, சட்டம் ஒழுங்கை யாராலும் சீர்குலைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். தில்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.