ராஜஸ்தானில் ராஷ்ட்ரீய ராஜபுத்திர கா்னி சேனை தலைவா் சுக்தேவ் சிங் கோகமேதி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தலைநகா் ஜெய்பூா் மற்றும் சில மாவட்டங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதுடன் பொதுப் போக்குவரத்து இயங்காததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே, கொலையாளிகளைக் கைது செய்ய காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்பூரில் உள்ள சுக்தேவ் சிங்கின் இல்லத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த 3 போ், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். சுக்தேவின் பாதுகாவலா்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் கொலையாளிகளில் ஒருவா் உயிரிழந்தாா். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனா்.
இதனிடையே, பஞ்சாப்பைச் சேர்ந்த பிரபல ரௌடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் சிங்கை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிக்க: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
காரணம், கடந்த பிப்ரவரி மாதத்தில் பஞ்சாப் காவல்துறை, ராஷ்ட்ரீய ராஜபுத்திர கா்னி சேனை தலைவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் கொலை முயற்சி ஆபத்து இருக்கிறது என ராஜஸ்தான் காவல்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இதனால், இந்தக் கொலைக்கு லாரன்ஸ் கூட்டாளிக்குள் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் ஊகிக்கின்றனர்.
ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக வெற்றி பெற்றது. இந்தச் சூழலில் நடந்த சுக்தேவ் படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.