தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வியாழக்கிழமை இரவு கழிப்பறையில் வழுக்கி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
அதற்கு உடனடியாக இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிக்கலான இந்த அறுவைசிகிச்சையை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகர ராவ்நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவ்வின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
தெலங்கானாவில் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி, பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.