புது தில்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று அவைக்குள் குதித்தனர்.
அந்த இரண்டு நபர்களையும் மடக்கிப் பிடித்த எம்பிக்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என்று இருவரும் கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் கருவியை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்ரி, “இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் மடத்திலிருந்து குதித்தனர். அவர்கள் கைகளில் வாயுக்கள் உமிழும் சாதனம் போன்றவற்றை வைத்திருந்தனர். அவர்களை எம்பிக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பு குறைபாட்டால் இது நடந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.