
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் அவையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
திடிரென இரண்டு பேர் மக்களவைக்குள் குதித்ததைப் பார்த்த மக்களவை உறுப்பினர்கள், துரிதமாக செயல்பட்டு, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என்று இருவரும் கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் குண்டுகளை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களைவயில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, மர்ம நபர்கள் இருவரும் அவைக்குள் நுழைந்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருவரும், தங்களது காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகைக் குண்டுகளை எடுத்துக் கொண்டு, மக்களவைக்குள் குதித்து அதனை வீச முயன்றபோது, எம்.பி.க்கள் பிடித்ததால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மர்ம நபர்களை நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பிடித்துச் சென்றபோது நெடியுடன் கூடிய புகை வரக்கூடிய பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.