நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் வாராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடியில், வசூலானது ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லுங்கள் என மதுரை மக்களவை உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் குறித்து நான் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பகவத் கராட் அளித்துள்ள பதிலில், 2014-15 இல் இருந்து 2022-23 வரை வாராக்கடன் என அறிவிக்கப்பட்ட தொகை ரூ.10.42 லட்சம் கோடி என்றும், இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.1.61 லட்சம் கோடி என பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க | கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
எப்போது வாராக்கடன் பற்றி பேசினாலும் வாராக்கடன் என்றால் வராமலே போகிற கடன் அல்ல, அதற்கு பின்னரும் வசூலிக்கப்படும் என்ற நீண்ட விளக்கத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தருவார். எல்லோருக்கும் ஏதோ இந்த வாராக்கடன் ரூ.10.42 கோடியையும் விரட்டி விரட்டி மத்திய அரசும், வங்கிகளும் வசூலித்து விடும் என்று எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார். இதைப்பற்றி பேசுபவர்களுக்கு ஏதோ பொருளாதாரமே தெரியாது என்ற எள்ளல் நடையிலும் பேசுவார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் வாராக்கடன் ரூ.10.42 லட்சம் கோடி என்றும், இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வாராக்கடன் ரூ.1.61 லட்சம் கோடி என பதிலளித்துள்ளார் என்றால் நமக்கு எழும் கேள்வி இதுதான்.
நிதியமைச்சரே வசூலுக்கும் வாராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே, இதற்கு பெயர் என்ன வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன? வாராக்கடனா? வஜாக்கடனா? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்லுவாரா என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.