கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் செங்கல் சூளையின் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பலியாகினர், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கம் மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாசிர்ஹாட்டில் உள்ள தால்திதா கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் புதன்கிழமை தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை செங்கல் சூளையின் புகைபோக்கி திடீரென இடிந்து விழுந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்!
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார், அதே நேரத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 20 பேர் பாசிர்ஹாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த இருவரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் இருவர் உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் பகுதியை சேர்ந்த ஜேதுராம் மற்றும் ராகேஷ் குமார் என்றும் மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த ஹபிசுல் மொண்டல் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
புகைபோக்கி இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.