ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.
இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸாரிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை மக்களவை கூடியவுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.
மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என்று பேசினார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் ஜோதிமணி உள்பட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாபன். ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 5 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.