கேரளத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மூலம் பிற பகுதிகளுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக தினசரி பாதிப்பு 10-ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் 230 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 949-ஆக அதிகரித்துள்ளது.
கேரள சுகாதாரத்துறையின் தரவுகளின்படி கடந்த திங்கள்கிழமை மட்டும் 11,700 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததில், 170 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சபரிமலைக்கு நாளொன்றுக்கு 1.20 லட்சம் பேர் தரிசனத்துக்காக சென்று கொண்டிருப்பதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் நெரிசலில் காத்திருக்கும் சூழல் நிலவுவதால் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்வதால், நாட்டின் பிற பகுதிகளுக்கும் மீண்டும் கரோனா பரவும் சூழல் எழுந்துள்ளது.