தில்லியில் புதிதாக 500 மின்சார பேருந்துகள் இயக்கம்!
தில்லியில் புதிதாக 500 மின்சார பேருந்துகளின் இயக்கத்தை துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் வியாழக்கிழமையன்று துவங்கி வைத்தனர். இந்த புதிய பேருந்துகளுடன் மொத்தம் 1,300 மின்சார பேருந்துகள் தில்லியில் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், இந்தியாவிலேயே அதிகமான மின்சார பேருந்துகள் இயக்கப்படும் நகரமாக தில்லி மாறியுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்தப் பேருந்துகள் மூலம் 42 மில்லியன் கிலோமீட்டர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதாகவும், 34,000 டன்கள் அளவிலான கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) வெளியீடு நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025-ல் தில்லியில் மொத்தம் 10,480 பேருந்துகள் இயக்கப்படும், அதில் 80 சதவீதம் மின்சார பேருந்துகளாக இருக்கும். அவற்றின் மூலம் 4.67 லட்சம் டன்கள் அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 8 பணியாளர்கள் பணியிடைநீக்கம்
இந்தப் புதிய மின்சார பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டதாகவும், புகை மற்றும் ஒலியை வெளியேற்றாதவையாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையிலும், ஜிபிஎஸ் (GPS) மற்றும் சிசிடிவி சேவைகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.