மக்களவைக்குள் புகைக் குப்பி வீச்சு: மேலும் 2 போ் கைது

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில்
மக்களவைக்குள் புகைக் குப்பி வீச்சு: மேலும் 2 போ் கைது

புதுதில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2001-இல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 22-ஆம் ஆண்டு நாளில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள மக்களவை புதன்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பிற்பகல் ஒரு மணியளவில்,பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து திடீரென இரு இளைஞா்கள் குதித்து அவா்கள் வைத்திருந்த புகைக் குப்பிகளைத் திறந்து மஞ்சள் நிற புகையை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதை சற்றும் எதிா்பாராத எம்.பி.க்கள் செய்வது அறியாமல் திகைத்தனா். ஒரு நபா் எம்.பி.க்களின் இருக்கைகள் மீது ஏறிக் குதித்து அவையின் மையப் பகுதிக்குச் செல்ல முற்பட்டாா். ஹனுமன் பெனிவால், மலூக் நாகா், குா்தீப் சிங் அஜ்லா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா். மற்றொரு நபரை பாதுகாப்புப் படையினா் பிடித்தனா். இதைத் தொடா்ந்து, அந்த இரு நபா்களையும் எம்.பி.க்கள் தாக்கினா்.

இந்தக் காட்சிகள் நாடாளுமன்றத் தொலைக்காட்சியில் நேரலையில் வெளியாகின. மக்களவை முழுவதும் மஞ்சள் நிற புகைமூட்டத்தில் மூழ்கியது.

நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று ஒரு பெண் உள்பட இருவா் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தர பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, இவா்களுக்கு உதவியதாக @ பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ராஜஸ்தானில் வசிக்கும் மகேஷ் மற்றும் கைலாஷ் என இரண்டு பேரையும் தில்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இவர்கள் 'பகத்சிங் ஃபேன் கிளப்' என்ற சமூக ஊடக குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள மகேஷ், தில்லியில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா தில்லியில் இருந்து ராஜஸ்தான் சென்றடைந்த பிறகு, அவரது கூட்டாளிகளின் மொபைல் போன்களை எரிக்க மகேஷ் உதவியுள்ளதும், மகேஷ் தாக்குதல் குழுவில் இடம்பெறப் போகிறார் என்பது தெரிய வந்ததும் சில காரணங்களால் அவர் குடும்ப உறுப்பினர்களால் அவர் தடுக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடேயே, தாக்குதலின் ஐந்தாவது குற்றவாளியும், மூளையாக செயல்பட்டவருமான லலித் ஜா வியாழக்கிழமை இரவு போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு துணை காவல் ஆணையர்கள் மற்றும் கூடுதல் காவல் ஆணையர்கள் உட்பட மூத்த காவல் துறை அதிகாரிகள், லலித் ஜாவிடம் விசாரணை நடத்தினர், அப்போது, நாடாளுமன்ற தாக்குதலுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.ஆனால் நாடாமன்றத்திற்குள் நுழைவதற்கு ஒரு நுழைவு அனுமதி அவசியம்; எனவே, அது கிடைக்காததால் எளிதாக நாடாளுமன்றத்திற்குள் நுழையக்கூடிய வகையில் அனுமதி சீட்டை ஏற்பாடு செய்துதரக்கூடிய அனைவரையும் அனுகி லலித் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ராஜஸ்தானில் உள்ள ஹோட்டலில் இருந்து லலித், செய்தி சேனல்கள் மூலம் நடந்து வரும் முன்னேற்றங்கள் மற்றும் போலீஸ் நடமாட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் காலிணிகள் சோதிக்கப்படுவதில்லை என்பதை தெரிந்துகொண்டதும், நாடாளுமன்றத்திற்குள் புகைக் குப்பியை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக லக்னௌவில் சிறப்பு வடிவமைப்பிலான இரண்டு ஜோடி காலணிகள் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை சேகரிப்பதற்காக, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீசார் லக்னௌ, மைசூர், கர்நாடகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் உள்ள குற்றவாளிகளுடன் தொடர்புடைய இடங்களுக்குச் செல்வதற்காக ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com