புது தில்லி: தொழிலதிபர் கௌதம் அதானியின் குழுமம், ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தனது தொழில் இறகை ஊடகத் துறைக்குள் விரிவாக்குகிறது.
இது குறித்து ஒழுங்குமுறை தாக்கலில், குழுமத்தின் ஊடக விவகாரங்களைக் கையாளும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தெரிவித்திருப்பது என்னவென்றால், குழுமத்தின் துணை நிறுவனமான "ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் நிறுவனம், ஐஏஎன்எஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் ஈக்விட்டி பங்குகளை உள்ளடக்கிய 50. 50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
அதேநிலையில், பங்குகளை நிறுவனம் எந்த விலைக்கு வாங்கியது என்பதை வெளியிடவில்லை.
முன்னதாக, அதானி குழுமம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வணிக மற்றும் நிதிச் செய்தி டிஜிட்டல் மீடியா தளமான பிக்யூ பிரைம்-ஐ இயக்கும் குவிண்டில்லியன் பிசினஸ் மீடியாவை வாங்கியபோது ஊடக வணிகத்தில் நுழைந்தது.
அதன்பிறகு, என்டிடிவியின் 65 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம், ஊடக வணிகத்தை விரிவுபடுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், அதானி குழுமம், ஐஏஎன்எஸ் பங்குகளை வாங்கியிருக்கிறது. கடந்த 2022 - 23 (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023) வரையிலான நிதியாண்டில் ஐஏஎன்எஸ் நிறுவனம் ரூ.11.86 கோடி வருவாய் ஈட்டியிருந்தது.
இதன் மூலம் ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் அனைத்து செயல் மற்றும் மேலாண்மையும் ஏஎம்என்எல் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும், ஐஏஎன்எஸ் இயக்குநர்களை இனி ஏஎம்என்எல் நியமிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐஏஎன்எஸ் நிறுவம் ஏஎம்என்எல்-ன் துணை நிறுவனமாக மாறியிருக்கிறது.