ஆந்திர பிரதேசம் குர்னூல் சிறைக்கு வெளியே 9 வயது குழந்தை ஒன்று கதறி அழும் காணொலி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. சிறையிலடைக்கப்பட்ட தாயைப் பார்க்க முடியாமல் சிறைக் கதவினருகே குழந்தை கதறி அழும் காணொலி பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையின் உறவினர்களால் பகிரப்பட்ட இந்தக் காணொலி அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது. அனுதாபத்தின் அடிப்படையில் குழந்தைக்கு தாயை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
திருடிய குற்றத்திற்காக கடந்த டிசம்பர் 12-ல் சிறையிலடைக்கப்பட்ட குழந்தையின் தாய் காஜா பி - க்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். 5 குழந்தைகளும் இப்போது உறவினர்களின் அரவணைப்பில் உள்ளனர். அவர் கணவரால் கைவிடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
இதுகுறித்து பேசிய மாவட்ட சிறை கண்காணிப்பாளர் கனி நாய்க், ஆறு வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே சிறையில் தாயுடன் இருக்க அனுமதி உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
குர்னூல் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் எஸ் ஜுபைதா பேகம், குழந்தைகள் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வேண்டிய உதவிகளைச் செய்து தருவதோடு, அவசியமெனில் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் குழந்தைகள் ஒப்படைக்கப்படுவர் எனக் கூறியுள்ளார். மேலும் அவர்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.