புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை
புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: கேரள சுகாதாரத் துறை அமைச்சர்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்தனம்திட்டா அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களை சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது.  கேரளத்தின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு பகுப்பாய்வு மூலம் அதைக் கண்டறிய முடியும். எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இருந்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘ஜெஎன்.1’ வகை கரோனா, பிஏ.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கரோனா தொடா்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜெஎன்.1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு ஜெஎன்.1 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ‘காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆா்டி-பிசிஆா் சோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. 

அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில், ஜெஎன்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் தேதி கண்டறியப்பட்டது. நாட்டில் தற்போது பதிவாகும் கரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெஎன்.1’ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com