பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானம் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.
இவா்கள் அனைவரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைத்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிரதமரை சந்திக்கவுள்ள சித்தராமையா; காரணம் என்ன?
இந்த விவகாரம் பற்றி பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், “நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13-ஆம் தேதி பாதுகாப்பு மீறப்பட்டது. இந்த பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பதிலாக, பொதுவெளியில் பேசி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் இந்த செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது. நிறுவனத்திற்கான மதிப்பு என்பது அவர்களின் அகராதியிலேயே கிடையாது.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநருடன் இணைந்த மணிகண்டன்!