புதிய அரசு பதவியேற்று ஓராண்டுக்குப் பிறகு ஹிமாச்சல் பிரதேசத்தின் சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. குல்தீப் சிங் பதானியா சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 19) ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் துணைத் தலைவராக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினரான வினய் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சட்டப்பேரவைத் துணைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்ட பிறகு வினய் குமாருக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.